அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுக்கக்கூடாது என அரச மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் பேராசிரியர் கார்லோ பொன்சேகாவை சந்தித்து அவர் தொடர்ந்தும் மருத்துவ சபையின் தலைவராக கடமையாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மகஜரை கையளிக்க சென்றது. அதனை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலை நிறுத்தப்போராட்டங்களை நான் விரும்புவதில்லை. நான் அரச மருத்துவ சபையின் தலைவராக 5 வருடங்களாக கடமையாற்றிவிட்டு மேலும் 5 மாதங்களுக்கும் கடமையாற்றினேன்.
எவ்வாறாயினும் நான் தலைமைப் பதவியில் இருப்பது குறித்து சிந்திக்கின்றேன். ஆனாலும் தற்போது எனது உடல்நிலைமை குறித்து அவதானம் செலுத்தவேண்டிய நிலைமையில் தலைமைப்பதவியில் இருப்பது சற்று கடினமான செயலாகும்.
எவ்வாறாயினும் (கைகூப்பி வணக்கத்துடன்) இனி எனக்காகவென கூறிக்கொண்டு எந்தவிதமான வேலைநிறுத்தப்போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டாம். இருப்பினும் எனது பங்களிப்பு இல்லாவிடினும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு எனது ஆதரவு என்றும் இருக்கும்.
அத்துடன் நாட்டில் வைத்தியர் ஒருவர் உருவாக்கப்படுவதற்கான சட்டதிட்டங்களின் வலுவை குறைக்காமல் இருக்க வேண்டும். அதனால் சைட்டம் நிறுவனத்தை சட்ட பூர்வமான ஒன்றாக அனுமதிக்ககூடாது என்று தெரிவித்தார்.






