றம்புட்டானுடன் கஞ்சா விற்பனை

றம்புட்டான் விற்பனை செய்வதைப் போன்று சட்டவிரோதமாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று இரவு வென்னப்புவ பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த நான்கு சந்தேக நபர்களும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் இருந்து 755 மில்லிகிராம் பெறுமதியுடைய கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர்கள் றம்புட்டான் விற்பனையில் ஈடுபடுவது போன்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததுடன், தும்மலதெனிய பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு தங்கியிருந்து வந்துள்ளனர்.

அத்துடன், லுணுவில, கம்மல மற்றும் சிறிகம்பல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்கள் எனவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள், நீர்கொழும்பு மற்றும் லியனகேமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.