யாழில் பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்

வியாபார அனுமதி பெற்றுக் கொள்ளாத வலி. தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வலி. தெற்குப் பிரதேச சபையின் ரி. சுதர்சன் இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி. தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் வருடம் தோறும் மார்ச் மாதம்-31ம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு வியாபார அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வியாபார அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டும் இந்த வருடத்துக்கான வியாபார அனுமதியைச் சபையுடன் தொடர்பு கொண்டு இதுவரை பெற்றுக் கொள்ளாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக பிரதேச சபைகள் சட்டத்தின் 141 முதல் 152 வரையான அதிகாரங்களின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக இந்த வருடத்தின் இதுவரையான காலகட்டத்தில் வியாபார அனுமதியைப் பெறாத பத்து வர்த்தக நிலையங்களுக்கெதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் வியாபார அனுமதியைப் பெற்றுக் கொள்ளாத வியாபார நிலைய உரிமையாளர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.