சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படும் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரி விவகாரத்தில், சினிமா துறையில் பணியாற்றி வரும் பல்வேறு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைத்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளவும் ரஜினி வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி பிரச்சனையில் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.