தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவோம் என்று சூளுரைக்கும் அரசாங்கம் தனது கூற்றுகள் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்து மனச்சுமையுடன் வாழும் எமது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தின் மக்கள் சந்திப்பு பணிமனையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரா. துரைரெட்ணம் அங்கு மேலும் பேசுகையில்
ஊழல்கள் அற்ற செயற்பாடு, இனவாதம் இல்லாத கொள்கை, நல்லாட்சிக்கு வலுவூட்டும் அடித்தளத்திற்கு உரமூட்டும் உறுதிப்பாடு, அனுபவமும் ஆளுமைத் திறனும் கொண்டு சிரிய நிர்வாகம் முதிர்ச்சியான அணுகுமுறை தொலைபேசி மூலம் மத்தியில் பேசி மாகாண நிர்வாகத்திற்கு சிறப்புகளை தேடிக் கொடுத்தவர் ஒஸ்ரின் பெர்னாண்டோ. இவர் ஜனாதிபதியின் செயலாளராக அதி உயர் பதவியை பெற்று செல்கின்றார். இவரின் வெற்றிடத்திற்கு தமிழர் மத்தியில் உள்ள நிர்வாக பதவியை அலங்கரித்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற உயர்நிலை நீதிபதிகள் போன்றோரில் இருந்து அனுபவமும் ஆளுமையும் மிக்க ஒருவரை நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்க வேண்டும்.
அல்லது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கல்வி நிலையில் உயர்ந்து நிற்கும் கறைபடியாத கரங்களை கொண்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்க வேண்டும்.
அப்போதுதான் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு தமது பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் தமிழர்களுக்கு ஆறுதல் கிட்டும் என்றார்.