பிரதமர் மோடியை சந்திக்க தீபா தீவிரம்!

போயஸ்கார்டன் பற்றி முறையிடுவதற்காக பிரதமரை சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள தீபா அணியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தீபா எழுதியுள்ள கடிதத்தை நேரில் வழங்கினர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

தற்போது அது துணை அமைப்பாக செயல்படும் என்று அறிவித்துள்ள அவர் அ.தி.மு.க. தீபா அணி என்ற பெயரில் இயங்கி வருகிறார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீட்பதற்காக எடப்பாடி- ஓ.பி.எஸ். அணியினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் தீபாவும், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே 52 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தீபா அணியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான வக்கீல் பசும்பொன் பாண்டியன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மற்றும் ராமச்சந்திரன், வெங்கட் ஆகியோர் டெல்லியில் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீபா, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற போது அங்கு மோதல் வெடித்தது. இது தொடர்பாக முறையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள தீபா அணியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தீபா எழுதியுள்ள கடிதத்தை நேரில் வழங்கினர்.

போயஸ் கார்டன் இல்ல விவகாரம் தொடர்பாகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தங்களை சந்தித்து நேரில் புகார் அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.