போராட்டமின்றி வங்காள தேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது விக்கெட்டுக்களை வீழ்த்த வங்காள தேச வீரர்கள் கடுமையாகப் போராடினர்.  இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. தவான் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 96 ரன்கள் எடுத்தார். இவர்களது ஆட்டத்தால் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

129 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 123 ரன்கள் (நாட்அவுட்) எடுத்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஞாயிற்றுக்கிழமை (18-ந்தேதி) லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.