இந்தியா, ஸ்பெயின் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜெர்மனி பயணத்தை முடித்த பிரதமர் மோடி, டெகல் விமான நிலையத்தில் இருந்து நேராக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நேற்று சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்ரிட் நகரில் அவர் தங்கவிருந்த விடுதிக்கு வெளியே குழுமியிருந்த மக்களை மோடி சந்தித்து பேசினார்.
இந்நிலையில், தலைநகர் மெட்ரிட்டில் உள்ள மான்குலோயா மாளிகையில் ஸ்பெயின் அதிபர் மரியனோ ராஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய – ஸ்பெயின் இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், உறுப்புகள் மாற்றம், சைபர் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்நாட்டு விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்தியா, ஸ்பெயின் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஸ்பெயின் கம்பெனிகள் முதலீடு செய்வது சிறந்த நேரம் இது தான்” என்று கூறினார்.
1998-ம் ஆண்டுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.