வங்காளதேசத்தை மோரா புயல் தாக்கியது: 5 பேர் பலி

வங்கக்கடலில் உருவான ‘மோரா’ புயல், வங்காள தேசத்தை நோக்கி நகர்ந்தது. இந்தப் புயல், அங்கு கோக் பஜார், சிட்டகாங் இடையே நேற்று காலை கரையைக் கடந்தது. அப்போது பல இடங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில், பள்ளிக்கூடங்களில், அரசு கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொக்கோரியா என்ற இடத்தில் மரங்கள் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். காக் பஜார் பகுதியில் மரம் விழுந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

புயல், மழை தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குடுப்தியா, மொகேஷ்காளி, டெக்னாப் ஆகிய நகரங்களில் சாலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, தீவு போல காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

பரோலியா, டோல்காட், புர்ப காஹிரா, புர்பா பர்குணா, பாஷிம் பர்குணா, கன்டமாரா உள்ளிட்ட பல கிராமங்கள் உருக்குலைந்து போய் விட்டன. இந்தப் புயல் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் வடக்கு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. புயல் பாதித்த பகுதிகளில் அரசாங்கம் மீட்பு, நிவாரண பணிகளை முடக்கி விட்டுள்ளது.