ரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ரஜினியுடன் அவர்களது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். இதில் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார். அதாவது போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று பேசினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூரும் கூறியிருந்தார்.

இதற்கிடையே ரஜினி ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயணா தெரிவித்து இருக்கிறார். இந்தநிலையில், நடிகர் ஆனந்தராஜ் ரஜினியை அவரது வீடு இருக்கும் போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், ஆனந்த்ராஜ் அரசியல் நிலைமை குறித்து பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், அரசியல் குறித்து பல விமர்சனங்களை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.