இன்று காலை அமைச்சரவை மாற்றம்! ரவி, மங்கள பதவிகள் பறிப்பு?

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

அலரி மாளிகையில் நேற்று பின்னிரவு நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நிதியமைச்சராக மங்கள சமரவீரவும், வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ஏற்க மறுத்திருப்பதாக பிந்திய தகவல் ஒன்று தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் மாற்றப்படவுள்ளனர்.

இந்த மாற்றங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியிருந்தனர். எனினும், இறுதி நேர மாற்றங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.