ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, “அரசியல் ஆசையில் இருக்கும் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் ஏமாந்து போவீர்கள். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்.

அப்படிப்பட்ட சிந்தனையில் இருப்பவர்கள் இப்போதே ஒதுங்கி விடுங்கள் இல்லாவிட்டால் ஏமாந்து போவீர்கள்” என்று பேசினார். “என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. அவர் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக உண்மையாக செயல்படுவேன்” என்றும் அவர் கூறினார்.

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று நடிகர் மாதவன் நிருபர்களிடம் கூறும்போது, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்படுகிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு நல்லது எது என்று நன்றாக தெரியும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் அரசியலில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன்” என்றார்.