சுசி லீக்ஸில் தொடர்ந்து பகிரப்படும் தகவல்கள்: கமிஷனர் அலுவலகத்தில் சுசித்ரா புகார்

கடந்த மார்ச் மாதம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறி வந்தார். பின்னர் தனது டுவிட்டர் கணக்கையும் முடக்கினார்.

நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்திருந்ததை அடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுசித்ரா தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார். மேலும் தான் மனஉளைச்சலில் இருந்து மெதுவாக மீண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை திரும்பியுள்ள பாடகி சுசித்ரா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

கடந்த மார்ச் 2-ஆம் தேதி (SuchitraKarthik) என்ற தனது டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. மேலும் எனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், எனது கணவர் கார்த்திக் இந்தியாவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தை தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்கினார்.

அதைத்தொடர்ந்து எனது பெயரில் 40 முதல் 50 போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு சுசி லீலைகள், லீலைகள், சுசித்ரா என்ற ஹேஷ் டேக்குடன் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. தற்போதும் பகிரப்பட்டு வருகின்றன.

இன்னமும் எனது பெயரில் தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து வரும் சில போலி கணக்குகளாவன,

https://twitter.com/suchifanleaks
https://twitter.com/SingerSuchitra
https://twitter.com/Suchitrareal
https://twitter.com/iamsuchitrakarthik

அதுமட்டுமல்லாமல் தனது மெயில் கணக்குக்கு இழிவான மெயில்கள் வருவதாகவும் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களை கைது செய்து, தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.