6 முறை மாரடைப்பு, 12 மணி நேர அறுவை சிகிச்சை: உயிர்பிழைத்த அதிசய குழந்தை

மராட்டிய மாநிலம் கல்யான் பகுதியில் விசாகா மற்றும் வினோத் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பிஜே வாடியா மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில தினங்கள் கழித்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. 45-வது நாளில் அந்த குழந்தை வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்குழந்தையின் பெற்றோர் உடனடியாக பிஜே வாடியா மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு அந்த குழந்தைக்கு முழு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை இதய பாதிப்புடன் தமனிகள் மாறி இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார். பெற்றோர் ஒப்புதலுடன் அக்குழந்தைக்கு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் வரை நீடித்தது.

இதனையடுத்து அக்குழந்தைக்கு இதயம் சீராக வந்தது. ஆனால் நுரையீரல் சரியாக இயங்கவில்லை. தொடர்ந்து குழந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தொடர்ச்சியாக குறைந்த கொண்டே வந்தது. கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தது. இதனால் டாக்டர்கள் கவலை அடைந்தனர். கடந்த 51 நாட்களாக அந்த குழந்தை ஐசியுவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நுரையீரல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து அக்குழந்தையின் நுரையீரல் சரியாக இயங்கி வருகிறது. இதனால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்குழந்தையின் பெற்றோர் குழந்தை உயிர் பிழைத்ததை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டனர்.

அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.5 லட்சம் வரை செலவானதாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த தொகை மருத்துவமனைக்கு கட்டியதாக அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.