கெய்லை காப்பாற்றிய ‘தொப்பி’

8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் லயன்சும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி கெய்ல், விராட் கோலி ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் 38 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை சிக்சர் நோக்கி தூக்கினார். அப்போது ‘லாங்-ஆப்’ திசையில் நின்ற குஜராத் பீல்டர் பிரன்டன் மெக்கல்லம் பாய்ந்து ஒற்றைக்கையால் பந்தை கேட்ச் செய்தார். இதையடுத்து குஜராத் அணியினர் மகிழ்ச்சியில் திளைக்க, கெய்ல் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நடுவருக்கு, மெக்கல்லம் கேட்ச் செய்த விதத்தில் சந்தேகம் வர, கெய்லை நிற்க சொல்லி விட்டு, 3-வது நடுவரின் உதவியை நாடினார்.

ரீப்ளேயில், மெக்கல்லம் பந்தை பிடித்து உருண்ட போது, அவர் அணிந்திருந்த வட்டவடிவிலான தொப்பி லேசாக எல்லைக்கோட்டில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அது சிக்சராக மாற்றப்பட்டது. கெய்லும் தொடர்ந்து விளையாடி அரைசதத்தை கடந்தார்.