வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

கொழும்புவில் தொடங்கிய முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணியின் கேப்டன் மோர்தசா பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்க்க இறுதியில் களமிறங்கிய மொசாதீக் ஹுசைன் 34 ரன்களும், முகமத்துல்லா 31 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்காள தேச அணி 155 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 77 ரன்களை அதிரடியாக குவிக்க அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. வங்காளதேச அணியின் கேப்டன் மொர்டாசா 2 விக்கெட்டுகளை எடுத்தார். 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி தற்போது 1 வெற்றியுடன் முன்னிலையில் உள்ளது.