ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல்: தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஜெ.தீபா பேரவையின் உயர்மட்ட குழு நிர்வாகி பசும்பொன் பாண்டியன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:-

கடந்த 28-ந் தேதி ஜெ.தீபாவிடம் செல்போனில் பேசிய நபர், ‘தேர்தல் பிரசாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். மீண்டும் கடந்த 2-ந் தேதி செல்போனில் பேசிய நபர், ஜெ.தீபாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.

மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அந்த நபர் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடைய முகமது என்பவர் என தெரியவந்தது. எனவே, ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரிடமும் நேற்று புகார் அளிக்கப்பட்டு உள்ளது.