கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவும், திமுக தலைவர் கருணாநிதியும் தான் காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய குற்றச்சாட்டுக்காக வைகோவுக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறைக்கு செல்லும் முன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற போது ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு துணை போகாதே, ஆயுதம் வழங்காதே, என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்கள் அனுப்பினேன்.
அந்த கடிதங்களை ஒரு புத்தகமாக தயாரித்து வெளியிட்டேன். பழநெடுமாறன் குறித்த புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.
இதில் உரையாற்றும் போது, “ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கும், பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியாதான் காரணம், இனப்படுகொலையின் கூட்டு குற்றவாளி அப்போதைய முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி, தி.மு.கவுக்கு இதில் பங்கு இருக்கின்றது” என தெரிவித்தேன்.
இதை உரையாற்றி சுமார் 5 மாதங்களின் பின்னர் என் மீது தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்தார்கள். மகிழ்ச்சி ஆனால் ஈழத்தில் பச்சிளம் குழந்தைகள், கொடூரமாக கொல்லப்பட்ட பெண்கள், ஏழு நாடுகளின் ஆயுத உதவியால் கொல்லப்பட்ட நமது உறவுகள் குறித்து குரல் எழுப்பவில்லையே.
இது குறித்து நாம் குரல் எழுப்பினால் இலங்கையில் இருக்கும் சில அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு புத்தி சொல்கின்றார்கள். தமிழனுக்கு எல்லா இடத்திலும் கருணாக்கள் இருக்கின்றார்கள்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.