இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்!

ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.

தூக்கத்தின் மீது ஏக்கம் வராத அளவுக்கு நீங்கள் உறங்க விரும்புகிறீர்களா?

* தூங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். ஏனெனில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரமாவது தேவைப்படும். அப்படியிருக்கையில் தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சாப்பிட்டால் செரிமான சுரப்பிகளின் இயக்கம் தூக்கத்தை தாமதமாக்கும்.

* தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி, பானங்கள், சாக்லேட்டுகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

* புகைப்பழக்கம் உடையவராக இருந்தால், நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே புகைப்பிடிப்பதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள நிக்கோட்டின் நரம்பு மண்டலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி தூக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும்.

* தூங்க செல்வதற்கு முன்பாக இளம் சுடுநீரில் குளியல்போடுவது நல்லது. குளிக்கும் நீரில் சில துளி லாவண்டர் ஆயில் அல்லது ஜாஸ்மின் ஆயிலை கலப்பது நறுமணம் பரப்பி தூக்கத்தில் ஆழ்த்தும்.

* தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரவில் பிரகாசமான வெளிச்சம் மூளையின் ஓய்வுக்கு தடையாக அமையும். ஆகையால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அறையில் மங்கலான வெளிச்சம் பரவட்டும்.

* பகல் வேளையில் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. தொடர்ந்து பகல் நேரத்தில் தூங்கும் வழக்கத்தை கடைப்பிடித்தால் இரவு நேர தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பது குறைய தொடங்கும். அதனால் இரவில் ஆழ்ந்து தூங்காமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.

* இரவில் தூங்குவதற்கு முன்பு எளிய வகை யோகாசன பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அவை கடினமான பயிற்சியாக அமைந்துவிடக்கூடாது. நிதானமாக கை, கால்களை அசைக்கும்படி இருக்க வேண்டும். அவை மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்திற்காக மனதையும் ஒருங் கிணைக்கும்.

* தூங்குவதற்கு முன்பாக கடுமையான உடற்பயிற்சிகளை ஒருபோதும் செய்யக்கூடாது. அவை உடலை அலுப்பாக்கி, தூக்கத்துக்கு தடையாக அமைந்துவிடும்.

* மது அருந்திவிட்டு தூங்கச் செல்வதை தவிர்த்திடுங்கள். அதிலிருக்கும் ஆல்ஹகால் தொடக்கத்தில் மயக்க நிலைக்கு கொண்டு சென்று தூக்கத்தை வரவழைப்பதுபோல் தோன்றும். ஆனால் சில மணி நேரத்திலேயே தூக்கத்தை கலையச்செய்துவிடும்.