இந்திய வீரர்களிடம் ஆக்ரோஷத்தை குறையுங்கள் என்று சொல்ல மாட்டேன்: கும்ப்ளே

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் போது ஸ்லெட்ஜிங் அதிக அளவில் நடைபெற்றது. டிஆர்எஸ் பிரச்சினையைத் தவிர மற்ற விஷயங்கள் விதிமுறைக்கு உட்பட்டே நடைபெற்றது. ஒரு அணியின் வெற்றிக்கு இதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனால் இந்திய வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை தடுக்கமாட்டேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘அணி சிறப்பாக செயல்பட வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அவர்களுடைய எந்தவொரு வழக்கமான நோக்கத்தையும் நான் கட்டுப்படுத்த விரும்பமாட்டேன். ஆக்ரோஷமான ஆட்டத்தை பற்றி நாம் அதிக அளவில் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஒவ்வொரு வீரரும் தங்களுடைய திறமை என்ன என்பதை வெளிப்படுத்த விரும்புவார்கள். இது முக்கியத்துவம் வாய்ந்த தொடர். இரு அணிகளும் தலா 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் ராஞ்சி போட்டியில் கடினமாக விளையாடும்’’ என்றார்.