பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் பெண்கள் கவுரவ கொலை: மனித உரிமை அமைப்பு தகவல்

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், மனித உரிமை அமைப்பின் நிர்வாகி டாக்டர் சர்வாபாரி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து அந்தக் காலத்திலேயே பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்துள்ளன.

1928-ம் ஆண்டு சிறுமிகள் திருமணத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதில், தேசத்தந்தை முகமது அலி ஜின்னா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஜின்னாவின் கனவை தகர்க்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்து கொண்டு இருக்கின்றன.

பெண்களுக்கு ஆதரவாக எந்த முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதை மத குருமார்கள் தடுக்கிறார்கள். இது சம்பந்தமான சட்டங்கள் கொண்டு வந்தால் அவற்றையும் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, மதசார்பு கட்சிகள் அதை தடுத்து நிறுத்தி விட்டன.

இன்று, பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் கொடூர செயல்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் பெண்களுக்கு மேல் கவுரவ கொலை அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள் 1,442 பேர்தான் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த வகையில் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான கொடுமை மிக அதிகமாக உள்ளது. அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.