ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்? முதன்முறையாக விளக்கமளித்த செவிலியர் பிரமிளா!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த மர்மமும் இல்லை என்று ஜெயலலிதாவுக்கு 2001-ல் சிகிச்சை அளித்த செவிலியர் பிரமிளா தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து நடிகை கெளதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக உள்ள பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழும் சந்தேகங்களை போக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் இல்லை என்று அவருக்கு 2001-ல் சிகிச்சை அளித்த செவிலியர் பிரமிளா முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் இல்லை எனவும், முதலமைச்சரின் மரணத்தில் ‌சந்தேகம் உள்ளது என தற்போது எழும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் கூறினார்.

ஜெயலலிதாவுடன் சசிகலா 34 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கூறிய அவர், ஜெயலலிதாவின் திட்டங்களை சசிகலா சிறப்பாக நிறைவேற்றுவார் எனவும் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் சொல்லும், செயலும் வேறுவேறாக உள்ளது எனவும் பிரமிளா குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.