60 வயதை தாண்டியவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டாமென கோரிக்கை!

60 வயதை தாண்டிய அமைச்சு செயலாளர்களுக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேவை நீடிப்பு வழங்கப்படும் அதிகாரிகள் நாட்டுக்காக சேவையாற்றுவதில்லை, மாறாக அவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவே முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சேவை மூப்பு அடிப்படையில் அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் செயலாளர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக வாய்ப்பு இவ்வாறு சேவை நீடிப்பு வழங்குவதனால் முடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதை பூர்த்தி செய்யும் அமைச்சின் செயலாளர்களுக்கு ஓய்வு வழங்கி, அடுத்த நிலையில் தகுதியும் சேவை மூப்பும் கொண்டவர்களுக்கு அந்தப் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் சிபாரிசின் அடிப்படையில் 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் சேவை நீடிப்பு பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.