சூரியனார் கோவிலின் ஒன்பது அற்புதங்கள்!

ரத சப்தமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் தலங்களில், சூரியனார் கோவிலும் ஒன்று. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோவில் உள்ளது. சூரிய தோஷ நிவர்த்திக்காக இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். தோஷ நிவர்த்திக்கு புகழ்பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ஒன்பது விதமான தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

* தென்னாட்டில் சூரியனுக்கு என்று அமைந்துள்ள தனிக் கோவில் இது.

* நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.

* சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.

* வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவழும் இன்முகங்களுடன், நவக்கிரகங்கள் அருள் வழங்கும் தலம்.

* ஒரு கோவிலுக்குள் நவக்கிரகங்களுக்கு என தனித்தனி சன்னிதிகள் அமைந்த ஒரே தலம்.

* நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.

* இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.

* நவக்கிரகங்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

* ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யும் படி அமைந்துள்ள தலம்.