ஜல்லிக்கட்டு கலவரத்தில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒரு வார காலமாக அறவழியில் போராடி வந்தனர். மாணவர்களின் எழுச்சி போராட்டத்தையடுத்து, தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என கோரி, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தும் பொருட்டு காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தது. இதனால் மூண்ட கலவரத்தால் நடுக்குப்பம் மீனவர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளும், மீன் கடைகளும் சேதமடைந்தன.
இந்தநிலையில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த மீனவர்களுக்கு நன்றி. நடுக்குப்பத்தில் மீன் சந்தை எரிந்துள்ளது. அவர்களுக்கு உதவி அளிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றிக் கூற நேரம் கேட்டுள்ளோம். முதல்வரை சந்திக்கும் போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைப்போம். மாணவர் புரட்சியின் வெற்றியை கொண்டாட மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கேட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.