நாட்டின் 68-வது குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் இன்று கோலாகலமாக விழா நடைபெற்றது. ராஜபாதையில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் கலந்துகொண்டார்.
விழாவின் முக்கிய அம்சமாக நாட்டின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படையின் அணிவகுப்பு நடைபெற்றது. இதுதவிர தேசிய பாதுகாப்பு படை கமாண்டோபிரிவு, எல்லைப் பாதுகாப்பு படையின் பிரத்யேக ஒட்டகப் படைப்பிரிவு என பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பும் மலைக்க வைத்தது.
நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் ராஜபாதையில் அணிவகுத்தன.
இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, ஐக்கிய அரபு அமீரக படைப்பிரிவின் அணிவகுப்பும் நடைபெற்றது. முப்படையைச் சேர்ந்த 149 வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர், இசைக்குழுவின் வாத்திய முழக்கங்களுடன் ராஜபாதையில் அணிவகுத்து இந்திய ஜனாதிபதிக்கு மரியாதை அளித்தனர்.