பிரபாகரன் வளரக் காரணம்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இப்போது அரசியல் களத்தில் வேகமாக குதித்துள்ளார். இப்போது மேடையில் இவர் பேசுவது போன்று அதிகாரத்தில் இருக்கும் போது செயற்பட்டாரா?

நேற்று பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கட்டி கடலில்போட வேண்டும் என சந்திரிக்கா கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் அதிகாரத்தில், பதவியில், ஆட்சியில் இருக்கும் போது எங்கே போனது என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வளர்வதற்கும், இலங்கையில் பாரிய யுத்தம் தோன்றுவதற்கும் சந்திரிக்காவின் குடும்பமும், சந்திரிக்காவும் ஒரு காரணம் என்பதும் உண்மையே.

இவர் யாழ்ப்பாண விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டு.,

வடக்கு வாழ் தமிழர்களின் துயர் தீர்க்கவே நாம் தற்போது இங்கு வருகைத் தந்துள்ளோம்.

நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ஏற்பட்ட கோபம், விரக்தி உள்ளிட்டவைகளால் தமிழ் மக்கள் தனிநாட்டைகோரி போராடியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிப்படையாக கூறிச் சென்றார்.

பாரியதொரு சந்தேகத்தை இவரின் இக்கருத்து ஏற்படுத்தியுள்ளது. அது என்ன வெனில் தமிழ் மக்களின் விடிவிற்காக பிரபாகரன் எனும் தலைவர் போராடியதாக தமிழ் மக்களும் உலக மக்களும் ஏன் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

கோபம், விரக்தி உள்ளிட்டவைகளால் தமிழ் மக்கள் தனிநாட்டைகோரி போராடியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

ஆனால் இவர் ஆட்சில் இருக்கும் போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே. பிரச்சினையை வளர்த்தது ஏன்? இதன் பின்னணி அரசியல் இலாபமே என்பது தெளிவாக தெரிவதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் எதிர்க்கும் சந்திரிக்கா ஒரு காலத்தில் அதனை ஆதரித்தவரே.

“பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் விமோஷனம் அவசியம் இல்லை அவருக்கு தேவையானதான இருந்தது தனி நாடாக ஆட்சி செய்து தான் தலைவராக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

தமிழர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அவருக்கு அவசியமாக இருக்கவில்லை நாட்டை பிளவுபடுத்தும் எண்ணம் மட்டுமே இவருக்கு இருந்தது இதன் காரணமாகவே என்னை பிரபாகரன் கொலை செய்ய முயன்றார்.

இப்போது தமிழ் மக்களுக்காகவும், இனவாதத்திற்கும் எதிராக குரல் கொடுக்கும் இதே சந்திரிக்காவே இந்த வார்த்தைகளை மேடையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.

இலங்கை யுத்தத்திற்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஓர் காலத்தில் ரணிலுடன் கைகோர்த்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார். ரணிலுடன் முரண்பட்டு மஹிந்தவுடன் கைகோர்த்து தமிழர்களில் அடிப்படை உரிமைகளில் கைவைத்தார்.

நவாலி தேவாலய கொலையிலிருந்து ஜந்து லட்சம் மக்களை ஒரே இரவில் வெளியேற்றி , செம்மணி புதைகுழி , பிந்துனுவேவா புனர் வாழ்வென்ற கொலை முகாமில் தமிழர்களை கொலை செய்தது எல்லாமே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது இவரது ஆட்சியிலேயே.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த தனது நிலைப்பாடு தொடர்பிலும் முன்பொரு சமயம் கருத்து வெளியிட்ட சந்திரிக்கா,

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

நேரத்திற்கு தகுந்தாற் போல் இவர் வார்த்தைவெளியிட்டு வருகின்றார். ஆனால் ஆட்சிக்கு வரும் போது தன்னை சமாதான தேவதையா பாவித்ததோடு தீர்வுப்பொதி கொண்டு ஆட்சிக்கு வந்தவர்.

ஆனால் தீர்வாக கிடைத்தது தமிழ் மக்களின் மரணங்களும் உயிர்ச் சேதங்களுமே. ஏன் அரசியல் கைதிகள் தொடர்பில் இப்போது இவரால் பேச முடியாது உள்ளது. அரசுக்கும் ஆட்சிக்கும் பயந்துள்ளாாரா?

இலங்கையில் ஆரம்ப காலம் முதலாக சந்திரிக்காவின் குடும்பம் இலங்கை ஆட்சியில் பெறுமதி வாய்ததொரு பெயரினைப் பெற்றிருந்தது.

இவர்களுக்கு இருந்த அதியுச்ச செல்வாக்கினைப் பயன்படுத்தி. வடக்கு கிழக்கு தனிநாடு என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் அம்மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு யுத்தம் என்பதையும் உயிர்ச்சேதம் என்பதையும் தடை செய்திருக்கலாம்.

தற்போதைய நல்லாட்சிக்கும் இவருடைய பங்களிப்பு இருக்கத்தான் செய்கின்றது. இவர் அன்று இழைத்த தவறுகளுக்கு தற்போது விமோஷனம் தேட முற்படுகின்றாரா?

உண்மையாகவே இலங்கையில் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வருகின்றாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையை ஓர் நல்லிணக்க தீவாக மாற்றியமைக்க முயலவேண்டும்.

மாறாக மேடைச் சொல் வார்த்தைகள் எதனையும் செய்து விடாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

பிரபாகரனையும், புலிகளையும் வளர்த்து விட்டு உரிமைகளை இழுபறியாக்கி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை அழிக்க அல்லது அழிய அப்போதைய அரசியல் தலைவர்களே முக்கிய காரணம் என்பதை இப்போதைய தலைவர்களும் மறுக்க முடியாது.