ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளுக்கு கட்டணம்: உலா வரும் போலி குறுந்தகவல்!

இண்டர்நெட் உலகில் சமூக வலைத்தள பயன்பாடு பலகட்ட வளர்ச்சிகளை கடந்து விட்டது. பொழுதுபோக்காக கருதப்பட்டு இன்று வியாபார ரீதியாக பல்வேறு வளர்ச்சிகளை கடந்துவிட்ட சமூக வலைத்தளங்கள் இன்று நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. உலக நடப்புகளை விவாதிக்க பயன்படும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு போலி தகவல்களை பரிமாறி கொள்ளவும் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் சில பயனுள்ள தகவல்களுடன் பல்வேறு போலி தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. வழக்கமாக பரப்பப்படும் புரளிகளுடன் புதிய புரளி ஒன்றும் சேர்ந்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இதனை தவிர்க்க இத்தகவலை வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டணத்தையும் நிர்ணயம் செய்யாது என அறிவித்தது. ஃபேஸ்புக் சேவையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற போலி குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதை நிறுத்தி, இவற்றை நிராகரிக்க வேண்டும் என வல்லுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகவல் மூலம் வாடிக்கையாளர்களின் நேரத்தை வீணடிப்பதை தவிர, எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசேஞ்சர் உள்ளிட்ட சேவைகளை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பேர் பயன்படுத்தி வருவதால் இந்த சேவைகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட முயற்சி செய்கின்றனர்.