புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்க வேண்டும்..!

இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புதைகுழிகளும், நினைவுச் சின்னங்களும் மீளமைக்கப்பட வேண்டும் என நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இதை கூறியுள்ளார்.

தொடர்ந்து, புலிகளின் நினைவுச் சின்னங்களின் மீது கட்டப்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட வேண்டும்,

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்,

தமது அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக எடுக்க வேண்டும்.

விசாரணைப் பொறிமுறைகள் குறித்து மக்கள் பெருமளவில் நம்பிக்கை கொண்டிராதபோதும், தமது காயங்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்று பலர் கூறியிருந்தனர் என்றும் மனோரி முத்தெட்டுவேகம இதன்போதே சுட்டிக்காட்டினார்.