யாழில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு சிலைகள் வேண்டும்! இலங்கை வருவாரா சசிகலா?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் பொன் மதிமுகராஜா ஆகியோரின் சிலைகளை யாழ்.மாநகரசபையின் எல்லைக்குள் நிறுவுவதற்கு யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் அனுமதிதர மறுப்பதாக யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று (30) பிற்பகல் 01 மணி முதல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் பொன் மதிமுகராஜா ஆகியோரின் சிலைகளை யாழ். மாநகரசபையின் எல்லைக்குள் நிறுவுவதற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஆனால் யாழ்.மாநகர ஆணையாளர் சில அரசியல் காரணங்களுக்காக அனுமதி தர மறுக்கின்றார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோருக்குச் சிலை அமைக்க சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட வேண்டும் என மதிமுகராஜா விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார்.

நாம் எதிர்வரும் ஐந்தாம் திகதியளவில் இந்தியாவிற்குச் செல்லவிருக்கிறோம். அங்கு சென்று கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக கட்சியின் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் படுகின்ற துயரங்களை எடுத்துக் கூறவுள்ளோம் என குறிப்பிட்டார்.

நாங்கள் இன்று அல்லது நாளை இந்தியாவின் உயர்ஸ்தானிகரைச் சந்திக்கவுள்ளோம். அதன் பின்னர் தமிழகம் சென்று முதலமைச்சர் பன்னீர்ச் செல்வம், அதிமுக கட்சியின் செயலாளராகத் தெரிவாகியுள்ள சசிகலா ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுவோம்.

எமது அழைப்பை ஏற்று அவர் கண்டிப்பாக இலங்கை வருகை தருவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த வேளையில் தமிழகத்தின் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் இலங்கைத் தலைமைக் கழகம் சார்பிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் சார்பிலும், எம்.ஜி.ஆர் .முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம், எம்.ஜி.ஆர் இளைஞரணியின் சார்பிலும் எமது வாழ்த்துக்க்களைத் தெரிவிப்பதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

“வடபுலத்தில் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆரின் சிலைகள் பல வல்வெட்டித்துறை உட்படப் பல பகுதிகளிலும் உடைக்கப்பட்டிருக்கிற நிலையில் இதுவரை காலமும் அந்தச் சிலைகள் புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. இந்தச் சிலைகளைப் புனரமைப்புச் செய்வதற்கு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?” என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது அதற்கு அவர் பதிலளிக்கையில்,

எம்.ஜி.இராமச் சந்திரன் ஈழத் தமிழர்களுக்காக தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியவர். ஆகவே, அவரது சிலைகளை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உடைக்கப்பட்டுள்ள சிலைகளை எமது சொந்த நிதியிலிருந்து புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான செல்லையா விஜயரட்ணமும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.