திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சேதமான பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் பல்வேறு நூதன போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கூட்டம் நடைபெறும் போது கலெக்டரை சுற்றி அங்கபிரதட்சணம் செய்யப்போவதாக கூறி கூட்டத்திற்குள் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமி‌ஷனர் மந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அலுவலக வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த இறந்த எலிகளை வாயில் வைத்தும், எலிக்கறியை மென்று சாப்பிட்டும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். மேலும் கலெக்டரிடம் கொடுப்பதற்காக மனு ஒன்றும் வைத்திருந்தனர். அதில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் வழங்க வேண்டும், மழைநீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமை செயலகம் முன்பு எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனதால் கூட்டத்தில் பங்கேற்ற த.மா.கா.மாநில விவசாயி அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாயிகள் பலர் கூட்டத்தில் இருந்து வெளியேறி போராட்டம் நடத்தினர். பின்னர் கூட்டம் தொடங்கியதும் உள்ளே சென்ற அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம், வாழைக்கு ரூ.1லட்சம், வெற்றிலை, கரும்புக்கு ரூ.50ஆயிரம் வழங்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.