கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பாங்கர் விலகல்!

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவர் அந்த அணியின் துணை பயிற்சியாளராக இருந்து, 2014-ம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

அந்த வருடம் பஞ்சாப் அணி இறுதிவரை முன்னேறியது. அதன்பின் இரண்டு சீசனில் குறிப்பிட்ட அளவில் ஜொலிக்கவில்லை. அந்த அணிக்காக விளையாடிய சேவாக், தற்போது ஆலோசகராக உள்ளார். சேவாக் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் சஞ்சய் பாங்கர் தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, நான் கடந்த நவம்பர் மாதம் கடைசி வாரம் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு அணி நிர்வாகம் இந்த மாதம் 2-வது வாரம் எனக்கு பதில் அனுப்பியது. நான் இங்கிலாந்து தொடரில் முழுவதுமாக மூழ்கியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் பாங்கர் இந்திய சீனியர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.