இனி பாஸ்போர்ட் பெறுவது ஈஸி!

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்புச்சான்றிதழ் கட்டாயமில்லை பல விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு.

பாஸ்போர்ட் பெறுவதில் 15 முக்கிய ஆவணங்கள் விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தன.

இதிலும், கடந்த 1989 ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கு தங்களது பிறப்பு சான்றிதழை விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இருந்தது.

இந்நிலையில், பாஸ்போர்ட் வழங்குவதில் இருந்த விதிமுறைகளை 15 லிருந்து 9 ஆக எளிமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

அதிலும் பிறப்பு சான்றிதழ் கட்டாயமல்ல என்று அறிவித்துள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரும் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மக்கள் அனவரும் பாஸ்போர்ட் எடுப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் இந்த அறிவிப்பானது மக்கள் பாஸ்போர்ட்டை விரைவாகப் பெற பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் பயன்கள்
  • பாஸ்போர்ட் பெறும்போது, அரசு ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக சுயசான்று அளிக்கப்பட்ட கடிதத்தை தனது மூத்த அதிகாரிகளிடம் முன்கூட்டியே அளிக்கலாம்.
  • பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை. அதற்கு பதிலாக பள்ளி,கல்லூரி டி.சி., பான்கார்டு, ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. காப்பீடு பத்திரம் ஆகியவற்றின் நகலை இணைக்கலாம்.
  • தத்து எடுக்கப்பட்ட குழந்தையாக இருந்தால், தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக யாருடன் அந்தகுழந்தை இருக்கிறதோ அவர்களின் பெயரை மட்டும் குறிப்பிடலாம்.
  • தாய்,தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் பிறப்புச்சான்றிதழ் இல்லாவிட்டால், பிறந்ததேதி இருக்கும் பள்ளிச்சான்றிதழ், தத்து எடுக்கப்பட்டபோது, குழந்தைகள் காப்பகத்தில் இருந்து அளிக்கப்பட்ட கடித்ததில் குறிப்பிடப்பட்டு இ ருக்கும் பிறந்ததேதி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • சன்யாசிகள், சாதுக்கள் ஆகியோரின் கோரிக்கையே ஏற்று, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தங்களின் பெற்றோர்களின் பெயரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக குருவின் பெயரைக் குறிப்பிடலாம். அதே சமயம், அவர்கள் பான்கார்டு, ஆதார்கார்டு, குருவின் பெயர் குறித்த ஆவணம் என இதில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருமணமான தம்பதிகள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்றிதழை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக யாராவது ஒருவரின் பெற்றோரின் பெயரை மட்டும் குறிப்பிடலாம். அதேபோல தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், தாய் அல்லது தந்தையின் பெயரைபாஸ்போர்ட்டில் அச்சிடுவது தேவையில்லை.