அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்ற நான்கு மாகாண முதலமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தென், மேல், கிழக்கு, ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாண முதலமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் குறித்து சந்திப்பில் பங்கேற்ற முதலமைச்சர்களுக்கு பிரதமர் விளக்கமளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக மாகாண சபைகளை சம்பந்தப்படுத்திக் கொள்வதை கொள்கை அடிப்படையில் தாம் மதிப்பளிப்பதாக முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் பேச்சு நடத்தி இது தொடர்பில் தீர்மானமொன்றை விரைவாக முன்வைப்பதாக முதலமைச்சர்கள் உறுதியளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு எதிராக வடக்கு மாகாண சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலம் ஊவா மாகாண சபையிலும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.