தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் சாட்சியமளிப்பு நேற்றுடன் நிறைவடைந்தன.
இதனையடுத்து, இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து தொகுப்புரைகள் ஆற்றுப்படுத்தப்பட்டன.
தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில். குறித்த வழக்கின் தீர்ப்பு ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க சற்றுமுன்னர் தீர்ப்பளித்தார்.
அதன் அடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 1996ஆம் ஆண்டு திருகோணமலை குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் ஜுரிகள் சபை முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.
இதன் போது குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜூரிகள் சபையின் தலையீடு காரணமாக இலங்கை நீதிதுறையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.