இந்தியா பகையை தவிர்த்து எங்களுடன் சேர வேண்டும்: பாகிஸ்தான் வலியுறுத்தல்!

CPEC எனப்படுவது சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழிப்பாதை திட்டம் ஆகும். இந்த பொருளாதார வழிப்பாதையில் சுமார் 51 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் சீனாவின் மேற்கு பகுதிகளை அரேபிய கடல் பகுதியுடன் பலுசிஸ்தான் வழியாக இணைக்கிறது.

இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டுடனான பகையை மறந்து, பொருளாதார பாதை திட்டத்தில் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் லெப்டினன்ட் ஜெனரல் அமீர் ரியாஸ் பலோசிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது இதனை வலியுறுத்தினார்.

அப்போது, ”இந்தியா பாகிஸ்தான் உடனான பகையை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நாச வேலைகளை குறைத்து எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கனிவான அணுகுமுறை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக, சீனா பாகிஸ்தான் இடையிலான இந்த பொருளாதார பாதை திட்டம் குறித்து இந்தியா ஏற்கனவே தனது கவலையை தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.