யாழ். மாம்பழம் சந்தியில் திருட முற்பட்ட இரு சிறுவர்கள் கைது!

யாழ் – அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று(21) நண்பகல் சலூனில் திருட முற்பட்ட இரு சிறுவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதே இடத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் 16 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் 50 சி.டி.க்களையும் கடந்த காலங்களில் திருடியுள்ளனர்.

நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த இந்த 10 வயது மற்றும் 11 வயது சிறுவர்கள் இருவரையும் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறுவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.