ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இரு அணி வீரர்கள்!

அலஸ்டைர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இரு நாட்டு வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து களம் இறங்கினார்கள்.