தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்..! பிரான்ஸ் முழுவதும் தீவிர பாதுகாப்பு…!

பிரான்ஸ் நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்கள் அச்சமின்றி இருப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அந்நாட்டு உள்துறை அமைச்சர் புரூணோ லீ ரோக்ஸ் தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமாராக 3000க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுத்தப்பட இருக்கின்றனர். விடுமுறை காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவரும் விடுமுறை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புரூணோ லீ ரோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தேசிய விடுமுறை கொண்டாட்டங்களின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் கடந்த இரு ஆண்டுகளில் 230க்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.

மேலும், பிரான்சில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஜூலை மாதம் வரை அவசர நிலை பிரகடனம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.