சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் சமந்தா

பழம்பெரும் நடிகை சாவித்திரி. இவர் 1950 மற்றும் 60-களில் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ் உள்பட பலருடன் இணைந்து நடித்து இருக்கிறார். கார், பங்களா மற்றும் வீட்டிலேயே நீச்சல் குளம் என்று ஆடம்பரமாக வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு இறந்தார்.

சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி படப்பிடிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இவர் சமந்தாவை சந்தித்து இந்த படத்தின் கதையை சொல்லி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தாவும் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், “நல்ல கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்க இருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்” என்று சமந்தா குறிப்பிட்டு உள்ளார். சாவித்திரி வாழ்க்கை கதையில் நடிப்பதை நடிகைகள் பலர் பெருமையாக கருதுகிறார்கள். முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டைரக்டரை அணுகி உள்ளனர்.

ஏற்கனவே நடிகை நித்யாமேனனைத்தான் சாவித்திரியாக நடிக்க வைக்க டைரக்டர் நாக் அஷ்வின் முடிவு செய்து இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதில் சமந்தாவை தேர்வு செய்து இருக்கிறார். சாவித்திரி வாழ்க்கை சம்பவங்களை சமந்தா படிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் நடித்த பழைய படங்களை பார்த்தும் நடை உடை பாவனைகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.

ஜெமினி கணேசன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.