அரசாங்க சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படாது!

அரசாங்க சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படவோ அல்லது விற்கப்படவோ மாட்டாதெனவும் 2017-ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அவ்வாறான ஆலோசனைகள் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்களை பங்குகளாக்கி, மக்களின் கடன் சுமையை குறைப்பதனால் இந்த நாட்டை ஒரு பேரளவு உற்பத்திப் பொருளாதார மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வரவு – செலவுத்திட்டத்தில் உள்ளதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

‘வரி விடுமுறைக் காலம், சலுகை மற்றும் வட்டியில்லாக் கடன், விவசாயத்துறையை வர்த்தகமயப்படுத்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கடன் ஏற்பாடுகள் என நாட்டை ஒரு பேரளவு உற்பத்தி நாடாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் வரவு – செலவுத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் சகல துறைகளினதும் பங்காளர்களின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் இலாபம் ஈட்ட முடியாது செய்த கடன்பொறி எனும் சவாலை, அரசாங்கம் பெரியளவில் எதிர்நோக்கியது.

இதனால் 2014-ம் ஆண்டளவில் மொத்த தேசிய உற்பத்தி 11 சதவீதமாக அரச வருமானம் குறைந்தது. இப்போது மொத்த தேசிய உற்பத்தி 13.6 சதவீதம் எனும் அளவுக்கு இறைவரி அறவீடு அதிகரித்துள்ளது.

இதற்கு வரி அறவிடுவதில் ஊழல் நீக்கப்பட்டு, செயற்றிறன் அதிகரித்தமையே காரணமாகும். இதன்மூலம் முதல் கடவையாக மீண்டெழும் செலவை அரச வருமானத்தால் ஈடு செய்ய முடிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.