அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை: 1,500 சுற்றுலா பயணிகள் தவிப்பு

அந்தமான், நிகோபார் தீவுகளில் நீல், ஹேவ்லாக் ஆகிய இரு இடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரிகள் ஆகும். இங்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.

இந்த நிலையில் அந்தமானில் வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயல் சின்னமாக மாறுகிற அபாயம் உள்ளது. இதையொட்டி மழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது.

இதன் காரணமாக நீல், ஹேவ்லாக் பகுதிகளில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தவித்தனர். அவர்கள் எப்படி திரும்பிச்செல்வது என திகைத்து நின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிவில் நிர்வாகம் அவர்களை பத்திரமாக மீட்குமாறு அந்தமான், நிகோபார் டிரை சர்வீஸ் கமாண்ட் படைப்பிரிவை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான பணியை படையினர் நேற்று தொடங்கினர். ஹேவ்லாக்கில் இருந்து சுமார் 1100 சுற்றுலா பயணிகளும், நீல் தீவில் இருந்து சுமார் 400 பயணிகளும் மீட்கப்பட வேண்டும்.

இந்த சுற்றுலா பயணிகள் மேற்கு வங்காளம், டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஹேவ்லாக் தீவில் தவிக்கிற சுற்றுலா பயணிகள், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், மீட்பதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து மருந்துகள், குடிநீர், அத்தியாவசிய பொருட்களுடன் என்.எஸ்.பித்ரா, பங்காரம், கும்பிர் மற்றும் எல்சியு-38 என 4 போர் கப்பல்கள் ஹேவ்லாக் விரைந்தும், பலத்த மழை, மோசமான வானிலை காரணமாக நங்கூரம் பாய்ச்ச முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்தமானில் பலத்த மழை பெய்யும் என உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.