ஜெயலலிதா மறைவு: தமிழகத்திற்கு டிசம்பர் ஒரு துரதிர்ஷ்டமான மாதம்?

தமிழகம் மீண்டும் ஒரு பேரிழப்பை இந்த டிசம்பர் மாதத்தில் சந்தித்திருப்பது அரசியல் சமூக வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு டிசம்பர் மாதம் துரதிர்ஷ்டமானது என மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. அதிமுக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.இராமச்சந்திரன் இறந்ததும் இதே டிசம்பர் மாதத்தில் தான்.

அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் திகதி நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் காலமானார்.

அதேபோன்று எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு 6 முறை முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவும் தற்போது டிசம்பர் மாதத்தில் காலமாகியுள்ளார்.

இவரும் எம்ஜிஆர் போன்று நீண்ட நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எம்ஜிஆர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக தெரிவான பின்னர் 1987 ஆம் ஆண்டு பதவியில் இருக்கும் போது காலமானார்.

ஜெயலலிதாவும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக தெரிவான பின்னர் பதவியில் இருக்கும் போதே மறைந்துள்ளார். இதேபோன்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முதலமைச்சருமான அண்ணாவும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று பதவியில் இருக்கும் போதே மரணமடைந்துள்ளார்.

மட்டுமின்றி இயற்கையும் தமிழக குடிமக்களை கடந்த பல ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொடூரமாக சோதித்து வருகிறது.

உலகையே உலுக்கிய 2004 ஆம் ஆண்டு சுனாமியால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டதும் இதே டிசம்பர் 26 ஆம் திகதி தான்.

மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் பல பகுதிகளில் பெருவெள்ளத்தால் மக்கள் உயிரையும் உடமைகளையும் இழந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான்.