சகல இனத்தவரும் ஏற்றுக்கொண்ட தீர்வை எதிர்பார்க்கின்றோம்!

ஒருமித்த இலங்கைக்குள் சகல இனத்தவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தீர்வையே எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் அமரர் க.கணேசலிங்கத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். அவரின் எண்ணத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நாம் அவர் மீது நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது. அத்துடன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர்.  நாட்டின் நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

நியாயமான அபிவிருத்தி அடையவேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் வரவேண்டும். பொருளதாரம் கட்டியெழுப்ப வேண்டும். இதில் வெற்றிக்காண வேண்டுமென்றால் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகண்டாலே அவர் எதிர்பார்க்கும் முதலீடு மற்றும் அபிவிருத்திகள் இந்த நாட்டில் ஏற்படும். தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லாவிட்டால் இது ஏற்படாது.

எம்மை பொறுத்தவரை ஒருமித்த , பிளவு படாத , பிரிக்கப்படாத ,பிரிக்க முடியாத ஒருமித்த ஒரு நாட்டுக்குள் ஒரு இலங்கைக்குள் நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வையே விரும்புகின்றோம்.

இதனை நாட்டில் சகல இனத்தவர்களும் அங்கீகரிக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் அங்கீரமில்லாத தீர்வு பிரயோசனமற்றது. இதனால் அவர்களின் அங்கீகாரத்துடன் தீர்வு வேண்டும்.

அத்துடன் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தீர்வாக இருக்காது. நாம் இன்று அதனையும் தாண்டி வகுதூரம் சென்றுவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.