கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

இதில், போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் பல்வேறு சுகாதார மற்றும் சமூக அக்கறை இல்லாத காரணத்தினால் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, போதுமான கல்வி கற்காத 30 வயது நபர் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவரை விட 4.6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், கல்வியறிவு இல்லாததால் சுகாதாரமான உணவுகளை தெரிவு செய்யாமல், உடல் உபாதைகளை ஏற்படுத்தும் உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

இதில் அதிகப்படியாக உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுகிறது.

சுகாதாரம் மட்டுமின்றி, போதிய கல்வியறிவு இல்லாததால் சமூக விழிப்புணர்வுகள் குறித்து தெரியாமல் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்கள் அதிகரித்துள்ளது என புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.