அடுத்த வாரம் வடக்குக் கிழக்கில் கடும் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், கடுமையான இடிமின்னலும் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும், புத்தளம் தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காற்றின் வேகம், மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும்.

மாலை நேரங்களில் திடீர் சூறைக்காற்று வீசும் என்றும், மரங்கள், கூரைகள் தூக்கி வீசப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்தவாரம் ஏற்பட்ட நடா புயலை அடுத்து வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை சடுதியாக 6 பாகை செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இதனால் வைரஸ் நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.