யாழ் குருநகர் கடலில் ஒருவர் பலி; மற்றுமொருவர் மாயம்

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றுமொரு மீனவர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போயுள்ள மற்றைய மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக அவர்களின் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஜெகன் என்னும் மீனவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரில் ஒருவர் விபத்துக்குள்ளான படகின் உதவியுடன் கடலில் தத்தளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கடலிற்கு சென்ற மீனவர்கள் சிலர் விபத்துக்குள்ளான குறித்த படகை கண்டுபிடித்ததுடன் உயிரிழந்த மீனவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர்.

அத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீனவர் மீட்க்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காணாமல் போயுள்ள மற்றைய மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.