அதிரடி திருப்பம்.. தைவான் அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் போனில் ஆலோசனை.. சீனா அதிர்ச்சி!

இவ்வாண்டு தொடக்கத்தில் தைவான் அதிபராக தேர்வான சாய் இங்வென்னுக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். ஆனால், இவர்களில் யார் முதலில் தொலைபேசியில் அழைத்தார்கள் என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், தைவான் அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் பேச்சு நடத்தியது அமெரிக்காவில் கொள்கை மாற்றம் ஏற்படும் வாய்ப்பினை எடுத்துக்காட்டவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று அந்நாடு தெரிவித்து வருகிறது.

மேலும், பெய்ஜிங் விதிப்படி தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முட்டுக் கட்டையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசி இருப்பது சீனாவுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

எனவே சீனா-அமெரிக்கா இடையேயான பிளவு மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 1979-ம் ஆண்டு தைவானுடன் ராஜங்க ரீதியிலான உறவை அமெரிக்கா துண்டித்தது. இந்நிலையில், ஒரே சீனா என்ற கொள்கையை தைவான் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், புதிய தைவான் அரசுடன் அனைத்து தொடர்புகளையும் சீனா துண்டித்துவிட்டதாகவும் அந்த நாடு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டிருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசியிருப்பது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது