உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப் காலமானார்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்த இன்குலாப், சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கிய சமயத்தில் உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்டார். இத்துடன் பல்வேறு கவிதை தொகுப்புகளையும் இன்குலாப் இயற்றினார். திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளராக இருந்தாலும் பிற்காலத்தில் மார்க்சிய கொள்கைகளில் அதிக ஆர்வம் செலுத்தினார்.

சமூக ஒடுக்குமுறை, போராட்டங்கள் இவற்றை மையப்படுத்தி இன்குலாப் படைப்புகள் அமைந்தன. ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ உள்ளிட்ட இவரின் பல்வேறு படைப்புகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிற்பி இலக்கிய விருது, மற்றும் கவிஞர் வைரமுத்து விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்குலாப் என்றால் புரட்சி என பொருள்படும்.