சாமுத்ரிகா சாஸ்திரம்: திருமணமாகும் ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 இலட்சணங்கள்…

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன.

தைரியமும், பொறுமையும்:

தைரியமும், பொறுமையும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டையும் இழந்துவிட கூடாது. அது பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி.

கவனம்:

வாழ்க்கையில் எல்லா தருணத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளிலும், ஈடுபடும் செயல்களிலும் கவனமாக இருத்தல் அவசியம்.

நல்ல நோக்கம்:

நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.

தளர்ந்துவிடக் கூடாது:

எந்த ஒரு தருணத்திலும் தளர்ந்து விட கூடாது. கடுமை, தீர்வுக் கிடைக்கவில்லை போன்ற காரணம் கூறி நகர்ந்து விட கூடாது. கடிமையாக வேலை செய்ய தயங்க கூடாது.

பகிர்தல்:

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும். அது உணவாகவோ, மகிழ்ச்சியாகவோ, பணமாகவோ எதுவாக இருப்பினும்.

காதும், இதயமும்:

சொற்களுக்கு காதையும், உணர்வுகளுக்கு இதயத்தையும் எப்போதும் தயங்காமல் கொடுப்பவனாக இருக்க வேண்டும். எதையும் முழுமையாக செய்ய வேண்டும்.

அபாயம்:

ஆபத்து / அபாயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்ற மனோப் பக்குவம் இருக்க வேண்டும்.

இரகசியங்கள்:

இரகசியங்கள் காக்க தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டும். உள்ளொன்றுமாக, புறமொன்றுமாக இருத்தல் கூடாது.

விடா முயற்சி:

வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் பொறுமையும், விடா முயற்சியும் கொண்டிருக்க வேண்டும். அது உறவாக இருபினும் சரி, வேலையாக இருப்பினும் சரி.

நல்லவை, கெட்டவை:

தேவையற்றதை மறக்கவும் கற்றிருக்க வேண்டும். வேண்டாதவற்றை எண்ணி எண்ணி வருந்தும் குணம் இருத்தல் கூடாது. அதே போல நல்லவற்றை / நல்லவர்களை மறந்துவிடவும் கூடாது.

பணிவு:

பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும். பணம், வெற்றி காரணம் காட்டி அகம்பாவம் வெளிப்படுத்த கூடாது. அகம்பாவம் நல்லறிவு, சிறப்புகள் போன்றவற்றை அழிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

இலட்சியம்:

இலட்சியம் கொண்டிருக்க வேண்டும், தன்னை சுற்றி இருப்பவர்களிடம் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

திறமை:

தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக, தன்னால் சாதிக்க முடியும் என்பதற்காக, மற்றவர்களை தாழ்த்தி மதிப்பிட கூடாது.

ஆரோக்கியம்:

உணவு மீதும், ஆரோக்கியத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களையும் இது சார்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

சோம்பேறித்தனம்:

தூங்கிக் கொண்டே இருக்கும் மலை பாம்பாக இருக்க கூடாது. சோம்பேறியாக இருக்க கூடாது. சுறுசுறுப்பாக செயற்படக் கூடிய நபராக இருக்க வேண்டும்.

கர்வம்:

தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பெரியவர்கள், முன்னோர்கள், சான்றோர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க தெரிந்த குணம் இருக்க வேண்டும்.

ஏமாற்றுதல்:

தன்னை விட வலுவற்றவன் என்பதால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களை ஏமாற்றுதல், பணம் பிடுங்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.

பின்வாங்குதல்:

எந்த தடங்கல் வந்தாலும், தான் விரும்பும் நபர்களிடம் / வேலையில் இருந்து பின்வாகும் குணம் இருக்க கூடாது.

பொறுமை இழத்தல்:

தன்னை உசுப்பி பார்க்க விஷமிகள் செய்யும் சித்து விளையாட்டுக்கு எல்லாம் தன் பொறுமை இழக்க கூடாது. சரியாக விசாரிக்காமல், தன் நண்பர்கள், குடும்பத்தினர் மீது சந்தேகப்படக் கூடாது.

கனவு:

தன் கனவுகளைவிட்டு ஒருபோதும் நகர்ந்துவிட கூடாது. நல்லவை மீதான நம்பிக்கை இழக்க கூடாது.